Search This Blog

Saturday, 11 January 2014

விளையச் செய்யும் தேவன்

விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன். - (சகரியா 8:12). 

ஒரு வயதான முதியவர் மாங்கன்று ஒன்றை நட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம் அவவழியே வந்த ஊர்த்தலைவர் 'தாத்தா உங்களுக்கோ வயதாகி விட்டது. இந்த செடி வளர்ந்து மரமாகி பழம் தரும் காலம் வரை நீங்கள் உயிருடன் இருக்கப்போவதில்லை. பின் ஏன் வீணாக கஷ்டப்படகிறீர்கள்?' என்றார். அதற்கு முதியவர் என்னைச் சுற்றியுள்ள மரங்களெல்லாம் என் முற்பிதாக்களால் நடப்பட்டவை. அதன் கனியை புசிக்கிற நான் என் வருங்கால சந்ததிக்காக இச்செடியை நட வேண்டாமா?' என்றார். முதியவர் தன் பெலவீனத்தையும் பொருட்படுத்தாமல் பின் சந்ததியினருக்காக செடியை நம்பிக்கையோடு நட்டு வைத்தார். 

பொதுவாக நாம் மழையை எதிர்ப்பார்த்து விதை விதைப்போம். விதைக்கும்போது உள்ளத்தின் ஓரத்தில் கவலை கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். 'சரியான நேரத்தில் மழை பெய்யவில்லையென்றால் எல்லாம் நஷ்டமாகி விடுமே' என்ற கவலைதான். ஆனால் ஏற்ற நேரத்தில் நல்ல மழை பெய்து நல்ல விளைச்சலைக் காணும்போது நாம் படும் சந்தோஷத்திற்கு அளவேயிராதல்லவா? வேதத்திலே வசனம் விதைக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த உலகமாம் நிலத்திலே விதை விதைக்கிறவர்களாக தேவன் நம்மை தெரிந்து வைத்திருக்கிறார். 

பிரியமானவர்களே, இன்று நாம் கிறிஸ்துவை சுதந்திரமாக ஆராதிக்க காரணம் என்ன? மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பாக உறவினர்கள் மத்தியிலும், சமுதாயத்திடமிருந்தும் வந்த போராட்டங்களை துச்சமாய் எண்ணி இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட நம் முற்பிதாக்களும் ஒரு காரணமல்லவா? அவர்கள் தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு வசனமாம் விதையை விதையை விதைத்ததால் தானே இன்று நாம் கர்த்தரை தொழுது கொள்ளுகிறோம்! 

அதுபோலவே நாமும் இனறு விசுவாசத்தோடு நம் பிள்ளைகளுக்கும், சிறுவர் மத்தியிலும், வாலிபர் மத்தியிலும் தேவ வசனத்தை அறிவிப்போம். சிறுவர் மத்தியில் வசனத்தை விதைத்தும் எந்தவொரு மாற்றத்தையும் நான் காணவில்லையே என்று ஒருவேளை நீங்கள் கலங்கலாம். விதையை விதைக்க வேண்டியது மட்டுமே நமது பொறுப்பு. விளையச் செய்கிறவர் தேவன். 

 ஒருவேளை நாம் உயிரோடு இருக்கும் மட்டும் பலன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்றாவது ஒரு நாள் நாம் விதைத்த விதை பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு விதைப்போம். விளையச் செய்கிற தேவன் நூறு மடங்கு விளையச் செய்வார். விதைத்தற்கான பலன் நிச்சயமாய் நமக்கு பரலோகத்தில் உண்டு. ஆமென் அல்லேலூயா! 

விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில் 
மாறி மாறி வருமே 
பகலும் இரவுமாய் வருடங்கள் 
மாயமாய் நழுவியே சென்றிடுமே 
சிந்திப்பீர் சிந்திப்பீர்காலங்களை சிந்திப்பீர் 
இயேசுகிறிஸ்துவின் வேலை ஒன்றே இன்று பிரதானம் 

ஜெபம் 
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் முன்னோர் கர்த்தரை ஏற்றுக் கொண்டதினால் நாங்கள் இன்று உண்மையான தேவனை தொழுதுக்கொள்ளும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறதே அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கும் கர்த்தரை குறித்து போதித்து, அவாகளும் உம்மை சேவிக்கும்படி கர்த்தருக்குள் அவர்களை வளர்க்க வேண்டிய ஞானத்தை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment