Search This Blog

Saturday, 11 June 2011

தாழ்வு மனப்பான்மை நீங்கட்டும்

எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது. - (ஏசாயா 60:1).

நம்மிடமில்லாத சில காரியங்களை பிறரிடம் காண நேரிடும்போது நாம் நம்மை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று எண்ணி விடுகிறோம். நம்மில் அநேகருக்கு நம்மை குறித்தே தாழ்வு மனப்பான்மை உள்ளது. இந்த தாழ்வு மனப்பான்மை பிறர் முன்பு நம்மை செயலற்றவர்களாக மாற்றி விடுகிறது. நாம் பெருமையுள்ளவர்களாக இருந்தால் பிறரை மதிக்க மாட்டோம். தாழ்மையுள்ளவர்களாக இருந்தால் எவரையும் உயர்வாய் மதிப்பிடுவோம். ஆனால் நம்மையே மட்டமாக மதிப்பதே தாழ்வு மனப்பான்மை ஆகும். பொதுவாக வாலிபர்களையே அதிகம் தாக்கும் தாழ்வு மனப்பான்மையின் தன்மையை காண்போமா?

முதவாவதாக உடலின் நிறம், அழகு, உயரம், ஊனம் இவைகள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம். அமெரிக்க அதிபரான ஆபிரகாம் லிங்கன் அவரது முகத்தோற்றத்தினால் பலமுறை கேலிக்கு உள்ளானார். ஒரு முறை ஒரு பெண், லிங்கனிடம், 'நான் பார்த்தவர்களுள் நீதான் மிகவும் அவலட்சணமானவன்' என்றாள். ஆனால் இந்த கேலிகளால் அவர் சோர்ந்து வீட்டிற்குள் முடங்கவில்லை. அடிமைதனத்தை ஒழிக்க துணிந்து செயலாற்றினார். அவருடைய பக்தி வாழ்க்கை, ஜெபம், மன உறுதி, தியாகம் மற்றும் ஏழைகள் மீது கொண்டிருந்த இரக்கம் அவரை அமெரிக்காவின் தலைசிறந்த அதிபராக்கியது.

வேதத்திலிருந்து கூற வேண்டுமென்றால் நாலறை அடி உயரமே இருந்த பவுல் உலகத்தையே கலக்கினார். திக்குவாயான மோசே இலட்சக்கணக்கான இஸ்ரவேல் இஸ்ரவேல் மக்களை நடத்தி சென்றார். சாலமோன் ராஜாவுக்கு அநேக அழகு மிகுந்த மனைவிமார் இருந்தாலும், கறுப்பு நிறமாயிருந்த சூலமித்தியாள் மீதே அதிக பிரியம் வைத்திருந்தார். அழகு என்பது நிறத்திலும் உடல் அமைப்பிலும் இல்லை. உள்ளத்தில் காணப்படும் நற்குணத்தில் தான் உள்ளது.

அடுத்ததாக, நமது பிறப்பு மற்றும் குடும்ப பின்னணியை குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளுகிறவர்கள் அநேகர் உண்டு. ஒரு விபச்சாரியின் மகனாக பிறந்தாலும், உற்றாரால் புறக்கணிக்கப்பட்டாலும் யெப்தாவை தாழ்வு மனப்பான்மை தாக்கவில்லை - (நியாயாதிபதிகள் 11:12,19) சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கு இருந்தது. ஏழ்மையான குடும்ப பின்னணியை குறித்து நம்மையே குறைவாக மதிப்பிடாமல், நாம் தேவனின் இராஜரீக கூட்டத்தார் என எண்ணி பெருமிதம் கொள்ளுவோம்.

கடைசியாக ஆங்கிலத்தில் சரளமாக பேசுபவர்களை அறிவாளிகளாகவும், ஆங்கிலம் தெரிந்தாலும் பேச முடியாவிட்டால் ஒன்றும் தெரியாத அடிமுட்டாள்கள் என்றும் நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு சோர்ந்து போகிறோம். இன்றைய உலகில் ஆங்கில பேச்சறிவு அவசியமே. பேச கற்று கொள்வது கடினமானதோ முடியாததோ அல்ல. நான் படித்த இடத்தில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், தவறி தமிழில் பேசினால் அதற்கு அபராதம் உண்டு. ஆகவே பள்ளியில் இருக்கும்போது யாருமே எதுவும் பேச மாட்டோம். ஆனால் படித்து முடித்து வேலைக்கு சேர்ந்தபோது, அவசியம் ஆங்கிலத்தில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்னுடைய உறவினர் பிள்ளைகள் வெளிநாட்டில் வளர்ந்தவர்கள். அவர்களுக்கு தமிழ் பேச வராது. அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் தவறு வந்து, அவர்கள் 'ஐயெ இவர்களுக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லையே' என்று சொல்வார்களோ என்றும், வெட்கமும், அவமானமும் ஏற்படுமே என்றும் பயந்து பேசாமலேயே இருந்து, கடைசியில் தைரியமாக, தவறாக இருந்தாலும் பேச ஆரம்பித்து, ஆரம்பத்தில் திக்கி திணறி பேசி, இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நன்கு பேச ஆரம்பித்து விட்டேன். ஆகவே ஆங்கிலம் ஒன்றும் பேச முடியாத மொழியல்ல, கஷ்டமான தமிழையே நாம் பேசும்போது ஆங்கிலம் பேசுவது ஒன்றும் பெரிய காரியமல்ல நிச்சயம்! கண்டிப்பாக மற்றவர்களோடு, தவறாக இருந்தாலும் பேச ஆரம்பிக்கும்போது, நிச்சயமாக சீக்கிரம் நீங்களும் பேச ஆரம்பித்து விடுவீர்கள்! உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள்!

தெலுங்கு பேசுபவர்களில் அநேகருக்கு ஆங்கிலமோ, ஹிந்தியோ பேச அறவே தெரியாது. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து சம்பாதித்து வருகிறார்கள். அவர்களில் அநேகர் பள்ளி படிப்பை கூட தாண்டாதவர்கள். நீங்கள் நன்கு படித்தவர், எதற்காக ஆங்கிலத்தில பேசுவதற்கு தயங்க வேண்டும்? தைரியமாய் பேச ஆரம்பியுங்கள்.

இப்படி தாழ்வு மனப்பான்மையில் வாழும் சகோதர, சகோதரிகளே, பிறரோடு உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். தாழ்வு மனப்பான்மையால், உங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னை போன்ற அமைப்புடனும், குணத்துடனும் யாருமே உருவாக்கப்படவில்லை, என்னை தனித்தன்மையுடன் தேவன் படைத்துள்ளார் என்ற உண்மையே உள்ளத்தில் இருக்கட்டும். நிறத்தையும், அழகையும் எண்ணி சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து போகாதீர்கள். சந்தர்ப்பம் வரும்போது, தாழ்வு மனப்பான்மை கொண்டு அமைதியாயிருக்காமல் தைரியமாக உங்கள் தாலந்துகளை வெளியே கொண்டு வாருங்கள். உங்களை பற்றிய தேவ திட்டத்தை உணர்ந்து அதை சிறப்பாக செய்ய முயற்சியெடுங்கள். உலகில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை கொண்டுதான் தேவன் பெரிய காரியங்களை செய்தார். உங்களை கொண்டும் பெரிய காரியங்ளை தேவன் செய்வார். எழும்பி கர்த்தருக்காக பிரகாசிப்போம்! ஆமென் அல்லேலூயா!

மனிதன் யாரென்று உலகில் யாருக்கும் தெரியாது
அவன் உருவம் கண்டு இவன் தான் என்று
சொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே
..
மனிதனைப் படைத்த கடவுள் அவனை
மண்ணென்று சொன்னாரே - அவன்
மண்ணென்று கண்டும் தேடியே வந்து ஜீவனைத் தந்தாரே
உறவும் அன்பும் உள்ளவன் மனிதன் என்பதை மறவாதே
அவன் பழக்கம் கண்டு இவன் தான் என்று
முடிவு செய்யாதே அவனை இழந்துவிடாதே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் உருவத்தையும், அழகற்ற நிலையையும், நிறத்தையும், வைத்து, எங்கள் மனம் சோர்ந்து போய் விடாதபடி, நாங்கள் உம்முடைய சாயலில் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை நினைவு கூர எங்களுக்கு உதவி செய்யும். தாழ்வு மனப்பான்மைகளை எங்களை விட்டு அகற்றும். நாங்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதையும், எங்கள் ஒவ்வொருவருக்காகவும் கிறிஸ்து தம் ஜீவனை தந்தார் என்பதை நினைத்து, உம்மில் வளரவும், பெலப்படவும் கிருபை செய்யும். சரியானபடி ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பேச வேண்டிய ஞானத்தை கொடுப்பீராக. தைரியமாக பேச கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Friday, 10 June 2011

மணவாளன் வருகிறார்

திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். - (யாக்கோபு 1:22).

ஒரு கூட்டத்தில் பேசும்படியாக ஒரு அருமையான ஊழியர் அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக அவர் ஜெபித்து கொண்டிருந்த போது, பிரசங்கத்திற்கு சற்று முன்பு தேவன் ஒரு தரிசனத்தை அவருக்கு காண்பித்தார். தன் திருமணத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தாள் ஒரு மணப்பெண். சபைமுன் மண மேடைக்கு வந்து மணமகனை கைப்பிடிக்க போகும் அந்த தருணத்திற்காக தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். முகத்திற்கு செய்ய வேண்டிய அலங்காரம், சிகைக்கு செய்ய வேண்டிய அலங்காரம், அணியப்பட வேண்டிய அணிகலன்கள், ஆடை, உதடுக்கு செய்ய வேண்டிய மெருகு என்று மணிக்கணக்காக அலங்காரம் செய்து கொண்டு தன்னையே கண்ணாடியில் பார்த்து பார்த்து ரசித்தவளாய் இருந்தாள். இங்கே மணவாளன் மேடையில் மணவாட்டியை சந்திக்கும்படி ஆவலாய் காத்து கொண்டிருக்கிறான். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று மணித்துளிகள் நகர்ந்து கொண்டே போனது. அந்தோ பரிதாபம்! மணப்பெண் வரவேயில்லை. மணப்பெண் தான் இருந்த இடத்திலே தன்னை அலங்கரித்து கொண்டேயிருந்தாளே ஒழிய மணவாளனை சந்திக்க புறப்படவேயில்லை.

இதேப்போலத்தான் இன்று ஒவவொரு கிறிஸ்தவர்களின் நிலையும், திருச்சபையின் நிலையும் உள்ளது. அநேக சத்தியங்களை தினந்தோறும் கேட்கிறோம். கேட்டு கேட்டு நம்மை சரிப்படுத்தி கொள்வது உண்மைதான். இருப்பினும் நான் இன்னும் தகுதியடையவில்லை, தகுதியான பின் ஊழியம் செய்கிறேன் என்று நம்மில் நாமே கூறிகொண்டு உட்கார்ந்து விடுகிறோம்.



நம்மை நாம் அலங்கரித்து கொண்டிருப்பதிலேயே திருப்தியடைந்து விடாமல் செயல்படுகிறவர்களாய் மாறுவோம். உதாரணமாக, சமைப்பது எப்படி என்ற புத்தகத்தை ஆர்வமாய் படித்து படித்து அதை மூளை அறிவில் வைத்திருந்தால் சமைக்க கற்று கொள்ள முடியாது. படித்தவற்றை செயல்படுத்தி பார்த்தால்தான் பிரயோஜனம் உண்டாகும். நாம் செயல்படுகிறவர்களாய் மாறும்படி தேவன் நம்மை எதிர்ப்பார்க்கிறார்.

கர்த்தரின் வருகைக்கான அடையாளங்கள் அவர் வருகை மிகவும் சீக்கிரம் என்பதை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கின்றன. சுனாமி அடித்து ஓய்ந்த பின்பு ஜப்பானியரில் அநேகர் கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டிருக்கின்றனர். மத்திய கிழக்கு பகுதிகளில் அனுதினமும் நடைபெறும் கலவரங்களும் போராட்டங்களும், சாவுகளும் கர்த்தரின் வருகையை தெரிவிக்கினறன அல்லவா? நாம் இன்னும் ஆயத்தமாகவில்லை என்று உட்கார்ந்து கொண்டிருந்தால், எப்போது மற்றவர்களை ஆயத்தப்படுத்த முடியும்? இன்னும் எத்தனையோ பேர் நீங்கள் இருக்கும் தெருவிலேயே கர்த்தரை குறித்து கேள்விப்படவில்லையே! 'எங்களுக்கு யாரும் கிறிஸ்துவை குறித்து கூறவில்லை, கூறியிருந்தால் நாங்களும் இரட்சிக்கப்பட்டிருப்போம்' என்று யாரும் உங்களை குறைகூறாதபடி, ஒரு நாளில் ஒருவருக்காவது சுவிசேஷம் சொல்வோமா?

பிரியமானவர்களே, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கொஞ்ச காலத்தில் மணவாட்டியாகிய நாம் மணவாளனாகிய கிறிஸ்துவுக்காக எதையாவது செய்வோமா? மணவாளன் நம்மை கண்டு களிகூறும்படியாக, என் பிரியமே என் உத்தமியே என்று நம்மை புகழும்படியாக அவருக்காக எதையாவது நம்மால் இயன்றதை செய்வோமா? 'இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது' - (வெளிப்படுத்தின விசேஷம் 22:12) என்ற இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம், ஆயத்தப்படுத்துவோம். மாரநாதா! ஆமென் அல்லேலூயா!

திருடனை போல் அவர் வருகை
தீவிரமாய் நிறைவேறிடுதே
ஆயத்தமில்லாத அவனியில்
அழுது புலம்பி கதறுவாரே
நம் இயேசு மகராஜன் சீக்கிரம் வருகிறார்
அவர் வருகையை சந்திக்க ஆயத்தமாவோமா?

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, கிறிஸ்துவின் வருகை மிக சமீபமாக இருப்பதால், மணவாட்டியாகிய சபை ஆயத்தமாகவும், மற்றவர்களை ஆயத்தப்படுத்தவும் தீவிரப்படுத்துவீராக. இன்னும் உலக கவலைகளில் மூழ்கி, வருகைக்கு ஆயத்தமாயில்லாதபடி கைவிடப்பட்டவர்களாக மாறி போகாதபடி, ஆயத்தமாக கிருபை தாரும். மணவாளனை எதிர்கொண்டு வருகிற மணவாட்டியாக ஒவ்வொரு சபைகளையும் மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Thursday, 9 June 2011

எளியவனாலே இரட்சிப்பு

அதற்கு கிதியோன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன். ஒரே மனுஷனை முறியஅடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். - (நியாயாதிபதிகள் 6:15-16).

நான்காவது நூற்றாண்டில் வாழ்ந்த டெலிமாக்கஸ் (Telemachus) என்னும் கிறிஸ்தவர் தனது கிராமத்தில் அதிகமான நேரத்தை ஜெபத்தில் கழித்து, அமைதியான வாழ்க்கையை கர்த்தருக்குள் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தேவன் அவரிடம் ‘நீ ரோமுக்கு போ’ என்று சொல்வதை கேட்டார். அந்த சத்தத்திற்கு செவிகொடுத்து, ரோமிற்கு நடந்தே செல்ல ஆரம்பித்தார். அநேக நாட்கள் நடந்தபிறகு அவர் அந்த நகரத்தை சென்றடைந்தார். அந்நேரத்தில் அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரு பெரும் கூட்டம் கொலோசியம் என்னும் ரோம நாட்டின் பெரிய அரங்கத்திற்குள் சென்றது. அவர்களை தொடர்ந்து, அவரும் அவர்களுடன் உள்ளே சென்றார். அந்நாட்டின் மன்னரின் முன் கிளாடியேட்டர்ஸ் (Gladiators) என்பவர்கள் ‘மரிக்கபோகும் நாங்கள் உமக்கு வந்தனம் செய்கிறோம்’; என்று கூறுவதை பார்த்தார். அந்த கிளாடியேட்டர்ஸ் என்பவர்கள், கொலைகுற்றம் செய்தவர்கள், அடிமைகள். அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு மற்றவர் மடியுமட்டும் போராடுவார்கள். சில நேரங்களில் சிங்கம் புலிகளோடும் போராட வேண்டி இருக்கும். அவர்கள் அப்படி போராட ஆரம்பிப்பதை கண்ட டெலிமாக்கஸ் 'இயேசுவின் நாமத்தில் நிறுத்துங்கள்' என்று கூச்சலிட்டு சொன்னார்.

அவர்களோ நிறுத்தாமல், விளையாட்டை ஆரம்பிப்பதை கண்ட அவர், அந்த அரங்கத்திற்குள் குதித்தார். ஒரு சிறு உருவம் கிளாடியேட்டர்களின் முன் ஓடி, இயேசுவின நாமத்தில் நிறுத்துங்கள் என்று கூறுவதை பார்த்த கூட்டத்தினர், அது ஏதோ ஜோக் (Joke) என்று நினைத்து சிரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அது உண்மை என்று அறிந்த போது, அவர்களுக்கு கோபம் வர ஆரம்பித்தது. டேலிமாகக்ஸ் அவர்களோடு நிறுத்துங்க்ள என்று கெஞ்சுவதை கண்ட ஒருவன், அவரை தன்னிடம் இருந்த வாளினால் குத்தினான். அவர் அப்படியே அங்கு தரையில் இரத்தம் பாய சரிந்தார். மற்றவர்கள் அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தனர். அப்போதும் அவர் அவர்களிடம் இயேசுவின் நாமத்தில் தயவுசெய்து இந்த சண்டையை நிறுத்துங்கள் என்று கூறியபடியே மரித்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத ஒரு வித்தியாசமான காரியம் நடைபெற்றது. அங்கிருந்த கிளாடியேட்டர்கள் அந்த மரித்த சடலத்தை பார்த்தபடி நின்றிருந்தனர். அந்த கொலோசியம் முழுவதும் அமைதி நிலவியது. அங்கு முதலாவது இருந்த வரிசையில், ஒரு மனிதன் எழுந்து வெளியேற ஆரம்பித்தான். மற்றவர்களும் அவனை பின்தொடர்ந்து வெளியேற ஆரம்பித்தனர். மரண அமைதியில் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

கி.பி. 391 ல் நடந்த அந்த சம்பவத்திற்கு பின், அங்கு மீண்டும் அந்த கிளாடியேட்டர்கள் அந்த கொலோசியத்தில் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொல்வது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அல்லேலூயா! இவை எல்லாம் எப்படி நடந்தது, ஒரு மனிதன் தேவனின் நாமத்தில் பேசியதால்!

ஒரு வேளை நாம் 'நான் என்ன ஒரு சிறு மூலையில் இருக்கிறேன், நான் சொல்வதை யார் கேட்க போகிறார்கள்?' என்று நினைக்கலாம், எத்தனையோ வருடங்களாய் நடத்தப்பட்ட அந்த குரூரமான கொடிய விளையாட்டு, ஒரு மனிதனின் வேண்டுதலால் நிறுத்தப்பட்டதென்றால், நாம் நம் தேவனுக்காக கூறும் வார்த்தைகளும் நிச்சயமாக கேட்கப்படும். அன்று கிதியோன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன். ஒரே மனுஷனை முறியஅடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். அப்படியே முறியடிக்க தேவன் கிருபை செய்தார்.

சிறியவர்களை கொண்டாகிலும், எளியவர்களை கொண்டாகிலும் இரட்சிப்பது தேவனுக்கு மிகவும் எளியது. ஆனால், நாம் எதுவும் செய்யாத பட்சத்தில் தேவன் யாரை கொண்டு எந்த காரியத்தையும் செய்ய முடியும்?

ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற. உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய் - (நீதிமொழிகள் 31:8,9) என்று வேதம் நமக்கு கூறுகிறது. பேச வல்லமையில்லாதவர்களுக்கும், திக்கற்றவர்களுக்காகவும் நாம் பேச வேண்டும். கர்த்தர் அதை காண்பார், அவர்களுக்கு நியாயம் செய்வார். நான் எளியவன், நான் திக்கு வாயன் என்று எல்லாருமே பேசாமல் இருந்தால் யார் எளியவர்களுக்கு உதவி செய்ய முடியும்? மோசேயை கர்த்தர் இஸ்ரவேலரை மீட்கும்படி அழைத்தபோது, மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். - (யாத்திராகமம் 4:10-12).

அந்த திக்குவாயும் மந்த நாவுமுள்ள மோசேயைக் கொண்டுதான் சமஸ்த இஸரவேலரையும் கர்த்தர் மீட்டார். ஆகையால் போக வேண்டியது நமது கடமை, நாம் பேச வேண்டியதை கர்த்தர் அந்த நேரத்தில் நமக்கு போதிப்பார். நாம் செய்ய வேண்டியதை தேவன் நமக்கு போதிப்பார். கர்த்தருக்காக நாம் எழும்பி நிற்போமா? அவருக்காக நாம் பேசுவோமா? அவருடைய வாயாக நாம் இருப்போமா? கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா!

எனக்காய் பேசிட நாவு வேண்டும்
என்னைப் போல் நடந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்பு கூற ஆட்கள் வேண்டும்
அதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு நடத்திடுவார்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசிக்கும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். மோசேயைப் போல கிதியோனைப் போல நாங்கள் எளியவர்களாயிருந்தாலும் எங்களை நீர் உமக்காக செயல்படும்படி அழைக்கிற தேவனாயிருக்கிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம். அப்படி நாங்கள் வரும் பட்சத்தில் எங்கள் மூலம் பெரும் காரியங்களை நீர் செய்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய அழைப்பை அறிந்து கொள்ளும் கிருபையை தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday, 8 June 2011

தாயின் அன்பிலும் மேலான அன்புடையவர்

'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை'. - (ஏசாயா 49:15).

தாயின் அன்பிற்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு அன்பில்லை என்று கூறுவார்கள். தாயின் அன்பு அத்தனை வலியது, உண்மையானது. வேதமும் தாயின் அன்பை குறித்து அருமையாக வெளிப்படுத்துகிறது. ஒரு தாய் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் இருப்பாளோ? அப்படி ஒரு நாளும் நடப்பதில்லை. ஆனாலும் அப்படியே நடந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று தேவன் நம்மை பார்த்து கூறுகிறார்.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு காட்சி என் மனதை உருக்கியது. ஒரு 38 வயதுள்ள பெண் மூளை வளர்ச்சி குன்றியவள், அவளுக்கு வலிப்பு வியாதியும் உண்டு. அவளால் சரியாக பேச முடியாது. அவளுக்கு வலியானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, பசியானாலும் சரி, அவளால் கத்ததான் முடியும். வார்த்தைகள் வாயிலிருந்து வராது. நன்கு சாப்பிட்டு, உடல் பருமனாக காணப்பட்டது. அவளை பார்த்து கொள்ளும்படி ஒரு பெண் இருந்தாள். இருப்பினும் அவளுடைய வயது சென்ற தாயார் அவள் அருகிலேயே உட்கார்ந்து, அவள் கத்தும்போதெல்லாம் அவள் தலையை வருடி, அவளை தேற்றி. அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தார்கள்.

அந்த வயதான தாயாரை பார்த்த போது என் மனம் பரிதாபம் கொண்டது. அவர்களிடம் போய் 'இந்த உங்கள் மகள் இப்படி ஆவதற்கு என்ன காரணம்?' என்று விசாரிக்க ஆரம்பித்தேன். அவர்கள் சொன்ன சம்பவம் என்னை உருக்கிற்று. இந்த பெண் வயிற்றில் இருக்கும்போது, அவர்களுடைய ஒரே மகன், நான்கு வயதுள்ளவன், தெருவை கடக்க முயன்றபோது, காரில் மோதி, அந்த இடத்திலேயே மரித்து போனான். அதை கண்ட அவர்களின் இருதயம் நொறுங்குண்டது. வயிற்றிலும் வாயிலும் அடித்து அழுது அழுது மிகவும் கலங்கி எப்பொழுதும் அழுதபடி இருந்தார்கள். அவர்களின் அந்த நிலை வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கியது. அந்த குழந்தை பிறந்த போது மூளை வளர்ச்சி குன்றியதாக, எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாததாக பிறந்தது. அதற்கு பின் பிறந்த குழந்தைகள் சாதாரணமானதாக பிறந்தாலும், இ;ந்த குழந்தையை பராமரிப்பது பெரிய காரியமாக காணப்பட்டது.

மற்ற பிள்ளைகள் எல்லாரும் திருமணமாகி கணவர் வீட்டிற்கு போய் விட்டார்கள். இப்போது தனித்து விடப்பட்டவர்கள் தகப்பனும் தாயும் அந்த பிள்ளையும் மாத்திரமே. தகப்பனும் அந்த பெண்ணின் 30ஆவது வயதில் மரித்து போனார். தாய் மிகவும் நலிந்த சரீரமும், பெலவீனமுமானவர்கள். அவர்களுக்கும் இருதய நோய் இருந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த வயதிலும் அவர்கள் அந்த பெண்ணை குளிப்பாட்டி, கழுவி, உணவு ஊட்டி பராமரித்து வருகிறார்கள். அந்த பெண்ணுக்கு சிறு காய்ச்சல் என்றாலும், நமக்கு பாரமாயிருக்கிறாளே, மரித்து போகட்டும் என்று விட்டுவிடாமல், டாக்டரிடம் கூட்டி சென்று மருந்துகளை வாங்கி கொடுத்து கவனித்து கொள்கிறார்கள். அந்த நிலையை பார்த்த போது என் கண்கள் கலங்கியது. இன்னும் எத்தனை காலம் இப்படி நடக்குமோ தெரியாது.

ஒரு தாய் தன் பிள்ளைக்கு தன் வியாதியின் மத்தியிலும், பெலவீனத்தின் மத்தியிலும் ஒன்றுக்குமே பிரயோஜனமில்லாத போதும் தன் பிள்ளை என்ற ஒரே காரணத்தினால், அது உயிரோடு இருப்பது தனக்கு பாரம் என்று நினையாதபடி தன் உயிரையே கொடுத்து வளர்க்கும் தாய்க்கு நிகரான அன்பு யாருக்கு உண்டு? நம் தேவனுக்கு மாத்திரமே உண்டு!!!

வேதம் சொல்கிறது, அப்படிப்பட்ட 'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை' என்று. நம் தேவன் அந்த தாயிலும் மேலான அன்புள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு விரோதமாக காரியங்ளை செய்யலாம். பெற்றோரை குறித்து அனுதினமன்னாவில் எழுதியிருந்தபோது, ஒரு வாசகர் தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டார். அவருடைய தாயார் அவர்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல், மகன் காதலித்த பெண்ணை மணந்ததற்காக மகனுக்கு விரோதமாக அநேக உபத்திரவங்களையும், மந்திரங்களையும் ஏவி விட்டதாக எழுதியிருந்தார். அப்படிப்பட்ட பெற்றோரும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். சில தாய்மார், பிறந்த குழந்தை திருமண கட்டிற்கு வெளியே பிறந்ததால் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு விட்டு செல்கிறார்கள்.

அப்படிபட்டதாக தாயானவள் மறந்தாலும், கெட்ட செயல்களை செய்தாலும், நம் தேவன் நம்மை மறப்பதில்லை. அவர் நம் மேல் வைத்த அன்பு குறைவதில்லை. உலகத்தில் யார் நம்மை கைவிட்டாலும் நம்மை கைவிடாத தேவன் ஒருவர் உண்டு. நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று வாக்குதத்தம் செய்தவர் நம்மை ஒரு நாளும் திக்கற்றவர்களாய் விடவே மாட்டார். தாயினும் தந்தையினும் நம் மேல் அதிகமாய் அன்பு கூர்ந்து, நம்மை அணைத்து கொள்வார். நம் கண்ணீரை துடைப்பார். என் தகப்பன் எங்களைவிட்டு மரித்து போனபோதும், என் தாய் என்னை விட்டு கடந்து போன போதிலும், என் தேவன் என்னை கைவிடாமல், என் வாஞ்சைகளை அறிந்து, என் தேவைகளை சந்தித்து, என்னை கரம் பிடித்து என்னை வழிநடத்தின தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு அவரே தகப்பன் என்ற வசனத்தின்படி அவரே தகப்பனாக தாயாக இருந்து வழிநடத்தி வருகிறார்.

ஒருவேளை நீங்கள் நினைக்கிறீர்களோ, எனக்கு யாரும் இல்லை, என் தகப்பனும் என் தாயும் என்னை கைவிட்டார்கள் என்று? 'என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்' (சங்கீதம் 27:10) என்று தாவீது சொல்வது போல நம் நம்பியிருக்கிற அனைவரும் நம்மை கைவிட்டாலும் நம் தேவன் நம்மை கைவிடமாட்டார். அவர் நம்மை சேர்த்து கொள்வார். மனம் தளர்ந்து போகாதிருங்கள். யாருமே எனக்கு இல்லையே என்ற அங்கலாய்ப்பு வேண்டாம். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன் உங்களுக்கு தகப்பனாக இருந்து உங்களை தாங்குவார், உங்களை தேற்றுவார், உங்களை ஆற்றுவார், உங்களை விசாரிப்பார். என்னை தேற்றி வழிநடத்தின தேவன் உங்களையும் தேற்றி, உங்கள் கண்ணீரையும் துடைப்பார். அவருடைய அன்பில் மூழ்கி, அவரை நாமும் நேசிப்போமா? அவர் நம்மை அன்புகூர்ந்தபடி நாமும் அவரில் அன்புகூருவோமா?

உம்மை போல இந்த உலகிலே
வேறொருவரும் இல்லையே
அம்மாவும் நீரே என்
அப்பாவும் நீரே என்
ஆத்தும நேசர் நீரல்லோ என்
இதய துடிப்பும் நீரல்லோ
..
அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நொறுக்கப்பட்டேன்
வேதனையில் நான் வாடுகையில் - உம்
அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, தாயின் அன்பிலும் மேலான அன்புடையவரே, உம்முடைய அன்பிற்கு ஈடாக வேறு எந்த அன்பும் இல்லையே. திக்கற்றவர்களின் தகப்பனாக தாயாக நீரே இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனும் தாயும் கைவிட்டாலும் எங்களை சேர்த்து கொள்கிறவர் நீர்தானல்லவோ! உம்முடைய அன்பிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் தகப்பனே.அந்த அன்பில் மூழ்கவும், நாங்களும் உம்மில் அன்பு செலுத்தவும் எங்களுக்கு கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday, 7 June 2011

மெய்யான கிறிஸ்தவன்

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். - (யோவான் 13:35).

ஓரு கிராமத்தில் அநேக கிறிஸ்தவர்கள் இருந்தனர். அங்கிருந்த ராணி என்ற வாலிப பெண்ணுக்கு கிறிஸ்தவத்தின் மீது சற்று ஈர்ப்பு இருந்தது. காரணம் தான் சிறுவயதில் கேட்ட சுவிசேஷமே! பின் கொஞ்சம் கொஞ்சமாக வேதத்தை வாசிக்க ஆரம்பித்தாள். ஒரு வருடத்தில் வீட்டிற்கு தெரியாமல் வேதத்தை மூன்று முறை வாசித்து விட்டாள். அவ்வப்போது பொது கூட்டங்களில் கலந்துகொண்டாள்.

வெள்ளை உடை அணிந்து ஆராதனைக்கு போகிறவர்களை தேவதூதர்கள் போல் எண்ணினாள். அந்நிய பாஷை பேசி பரவசமாக ஆராதிப்பவர்களை பார்க்கும்போது, இவர்கள் பரலோகத்திற்கு தகுதி பெற்ற பரிசுத்தவான்கள் என்று நினைத்தாள். சுவிசேஷத்தை பிரசங்கித்தவர்களை பேதுருக்கள் என்றும் மேடையில் முழங்கியவர்களை எலியாக்கள் என்றும், சபை நடத்துபவர்களை சத்தியவானகள் என்றும் எண்ணினாள்.

மாதங்கள் உருண்டன. சபைக்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால் அங்கோ வெள்ளை உடை உடுத்தின பலருடைய கறைபடிந்த இருதயங்ளை காண நேரிட்ட போது அதிர்ச்சியடைந்தாள். அந்நிய பாஷை பேசினவர்கள் அன்பற்ற வார்த்தைகளை பேசியதை கேட்டபோது, கேள்விகள் பல எழும்பின. நாங்க்ள இயேசுவின் அடிமைகளென பேசின பலரும் தங்களது வாழ்ககை பாதையில் பணம், பொருள், ஆடம்பரம், அந்தஸ்து, புகழ் ஆகியவற்றக்கு அடிமைகளாயிருப்பதை கண்டபோது யார் சத்தியவான் என கேட்க நாவு துடித்தது.

சில இடங்களில் விசுவாசிகளை பாதுகாக்க வேண்டிய போதகர்களே, வேலியே பயிரை மேய்ந்த அநியாயத்தையும், பசுத்தோல் போர்த்திய புலிகளாக, வெளியே பரிசுத்தர்களாக, சாதுக்களாக, ஆனால் உள்ளேயோ விசுவாசிளை பட்சிக்கிற போதகர்களாக இருப்பதை கண்டு திடுக்குற்றாள்.

ஆனால் வேதத்தை வாசிக்க வாசிக்க தவறு தன் பக்கமே இருக்கிறது என உணர்ந்தாள். கிறிஸ்தவர்களையும், ஊழியர்களையும் வெளித்தோற்றத்தை கொண்டு அடையாளம் கண்டதே அத்தவறு. ஆனால் வேதம் கூறும் அடையாளங்கள் வேறு என்பதை அறிந்தாள். மரத்தை கனிகளால் அறிவது போல பரிசுத்தவான்களை அவர்களின் செயலினால் அறிந்திட சொன்னார் இயேசு. ஒருவரையொருவர் நேசிப்பதை அடிப்படையாக வைத்து அவர்கள் தேவனுடைய புத்திரர்களா? என அறிய சொன்னார். ஊழியர்களின் செய்தியை வேதத்தின் வெளிச்சத்தை கொண்டு பகுத்தறிய சொன்னார்.

ஆம், கிறிஸ்தவர்களின் உண்மையான பரிசுத்தத்திற்கு வெளிப்புற நடக்கையும் சாட்சி கொடுக்க வேண்டும். ஆயினும் அவர்களுடைய அன்பின் செயல்பாடு, தாழ்மை, நேர்மை, பிறர் நலம் தேடும் பண்பு, கபடற்ற வார்த்தை, பெருமையை பிரதிபலிக்காத நடவடிக்கை போன்றவற்றினாலேயே உண்மையான கிறிஸ்தவன் யார், மாய்மாலக்காரன் யார் என்பதை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக தேவன் நம்மை இரட்சிக்கவில்லை. இப்படிப்பட்ட உண்மை கிறிஸ்தவ செயல்பாடுகள் நம்மில் காணப்பட வேண்டும் என்றே இயேசு விரும்புகிறார். அப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான பரிசுத்தவான்கள்!

பிரியமானவர்களே, பிறர் கண்களை கவரும் சில ரோஜாக்களில் மணமிருப்பதில்லை. ஆனால் வண்ணத்து பூச்சிகளும், வண்டுகளும் தானாகவே வந்து மொய்ப்பது மணமும், தேன் சுவையுமுள்ள பூக்களையே! வெளித்தோற்றத்தால் மட்டும், பிறரை தன் பக்கத்தில் ஈர்ப்பது மெய் கிறிஸ்தவனல்ல, தேவன் விரும்பும் சுகந்த வாசனையும், கனியும் நம்மிடம் காணப்படும்போது அதை பிறர் அடையாளம் கண்டு, நம்மூலம் கிறிஸ்துவை ருசிபார்ப்பது நிச்சயமல்லவா? அப்படிப்பட்டதான தேவன் விரும்பும் சுகந்த வாசனை வீசுகிறவர்களாக, நற்கனிகளை கொடுக்கிறவர்களாக நாம் மாறி, கிறிஸ்துவை மற்றவர்களுக்கு பிரதிபலிப்போமா?

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்
..
என் பார்வை சிந்தை எல்லாம்
நீர்காட்டும் பாதையில் தான்
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்
..
மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும், தூயோனே உமக்கே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, வெளியே பார்வைக்கு பரிசுத்தவான்களாக, பரிசுத்தவாட்டிகளாக இல்லாதபடி, உள்ளான இருதயத்தில் தேவன் விரும்பும் கனிகளும், உண்மையும், உத்தமும் எங்களிலே காணப்பட கிருபை செய்வீராக. எங்களை காண்கிறவர்கள் உண்மையிலேயே கிறிஸ்துவை காணும்படியாக எங்கள் நடை, உடை, சொல், செயல், எல்லாம் உம்மை பிரதிபலிக்கதக்கதாக, இருதயத்திலிருந்து எங்கள் செயல்கள் வெளிப்பட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday, 6 June 2011

யாவரும் போக விரும்பும் இடம்

எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. - (1 கொரிந்தியர் 2:9).

நேற்றைய தினம் யாரும் போக விரும்பாத இடம் நரகம் என்று பார்த்தோம். இன்று யாவரும் போக விரும்பும் இடமாகிய பரலோகத்தை குறித்து பார்க்க போகிறோம். தென்கொரிய நாட்டின் பிரசித்த பெற்ற தேவ ஊழியராகிய பால் யாங்கி சோ அவர்கள் ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் தனிப்பட்ட ஊழியம் செய்து வந்தார். அவர் ஒரு சகோதரியிடம் நரகத்தை குறித்து விவரித்து, 'நீங்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம். நீங்கள் கர்த்தரை ஏற்று கொள்ளுங்கள்' என்று நரகத்தை குறித்து விவரித்தார். அதை கேட்டு கொண்டிருந்த சகோதரி, ' நான் ஏற்கனவே நரகத்தில் தான் இருக்கிறேன். என் கணவர் குடித்து கொண்டு வந்து என்னை தினமும் தர்மஅடி கொடுத்து கொண்டு இருக்கிறார். பற்றாகுறைக்கு கடன்காரன் என்னை அசிங்கமாக பேசி போகிறான். இவற்றை விட நரகம் மேல் என்று தோன்றுகிறது' என்று அவரை பேச விடாமல் அனுப்பி விட்டார்கள். அவரோ வீட்டிற்கு வந்து, 'நான் உம்முடைய வார்த்தைகளை தானே பேசினேன், ஏன் அந்த சகோதரி ஏற்று கொள்ளவில்லை' என்று கர்த்தரிடம் முறையிட்டார். அப்போது தேவன் அவரிடம், 'நீ இன்று பரலோகத்தை குறித்து பகிர்ந்து கொள்' என்று கூறினார். அதன்படி அவர் பரலோகத்தை குறித்து அந்த சகோதரியிடம் விளக்கினபோது, அவர்கள் 'அப்படி ஒரு இடம் இருந்தால் நிச்சயமாக நான் அங்கு செல்லவே விரும்புகிறேன்' என்று தன்னை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஏற்று கொண்டார்களாம். ஆம், நாம் இந்த உலகத்தில் படும் பாடுகள், துன்பங்கள் மத்தியில் இந்த உலகத்தில் தான் நரக வாழ்க்கை என்றால், மறு வாழ்விலும் நித்திய நரகம் என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் நமக்காக ஒரு வாசஸ்தலத்தை பரலோகத்தில் ஆயத்தம் செய்யவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரலோகம் சென்றிருக்கிறார்.

எல்லா மதத்திலும் பரலோகம் உண்டு என்பதை சொர்க்கம், பரலோகம், மேலோகம் என்றெல்லாம் அழைக்கப்படுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். சிலருக்கு அவர்கள் தங்கள் உயிரை தங்கள் மதத்திற்காக கொடுத்தால் அவர்கள் மரித்த பின்பு 72 கன்னிகைகள் அவர்களை பரலோகத்தில் வரவேற்பார்கள். அதுதான் சொர்க்கம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் வேதத்தில் பரலோகத்தை குறித்து அநேக அற்புதமான காரியங்கள் விளக்கப்பட்டுள்ளது.

பரலோகம் என்பது இரட்சிக்கப்பட்டவர்கள் மாத்திரமே செல்லும் இடமாகும். அங்கு தேவனையோ, கிறிஸ்துவையோ மறுதலிக்கிறவர்கள் இருக்க மாட்டார்கள். இரட்சிக்கப்பட்டு பரலோகத்திற்கு செல்லுபவர்களுக்காக தேவன் உண்டு பண்ணினதைதான் இதுவரை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. அப்படிப்பட்ட அற்புத காரியங்களால் நிறைந்ததுதான் பரலோகமாகும்.

முதலாவது அங்கு தேவனிருப்பதால் அது சிறந்த இடமாகும் (மத்தேயு 10:32).
தேவன் அங்கிருப்பதால் அந்த இடத்தில் இருளுக்கும் பாவத்திற்கும் இடமில்லை. தேவனே ஒளியாயிருந்து தம் ஜனத்தை நடத்துவார்.
பரலோகம் மிகுந்த சந்தோஷம் நிறைந்த இடமாகும். (யூதா 1:24)
பரலோகத்தில் பொக்கிஷங்களை நாம் இந்த உலகத்தில் இருக்கும்போதே சேர்த்து வைக்க முடியும். (மாற்கு 10: 21)
பரலோகம் பலன்கள் மிகுதியாய் கிடைக்கும் இடமாகும் (மத்தேயு 5:12)
பரலோகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறது (லூக்கா 10:20)
மரணமோ, துக்கமோ, அலறுதலோ வருத்தமோ இல்லாத இடம் பரலோகமாகும் (வெளிப்படுத்தின விசேஷம் 21:4).

'அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 21:22-26)

'பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்'. - (வெளிப்படுத்தின விசேஷம் 22:1-3).

இப்படிபட்ட அற்புதமான பரலோகத்திற்கு செல்ல ஒரே ஒரு வழி மாத்திரம்தான் உண்டு. 'தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 21:27). ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட என்ன செய்ய வேண்டும்? ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களை போக்க வந்த பலி அவர்தான் என்று அறிந்து, ஏற்று கொண்டு, நம்முடைய பாவங்களை அவரிடம் சொல்லி, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவும் என்று சொல்லி மன்னிப்பை கேட்டு பெற்று கொள்ள வேண்டும். அதுவே இரட்சிப்பு ஆகும். அப்படி இரட்சிப்பை பெற்று கொண்டப்பின் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று கொள்ள வேண்டும். 'இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்' (யோவான் 3:5) என்று இயேசுகிறிஸ்து கூறினார், அப்படியென்றால் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவர்களே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். மற்றவர்கள் உள்ளே பிரவேசிக்க முடியாது. அதன்பின் நல்ல ஆவிக்குரிய சபையில் சேர்ந்து, கர்த்தருக்குள் வளர வேண்டும். பாவத்திற்கு நீங்கலாகி, பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கர்த்தருக்குள் பரிசுத்தமாய் தங்களை காத்து கொள்ள வேண்டும்.

இந்த தகுதிகளை பெற்றவர்கள் நிச்சயமாக பரலோகத்தில் பிரவேசிக்க முடியும். அந்த பரம கானானுக்குள் நாம் அனைவரும் சென்று கர்த்தருடைய பிரசன்னத்திற்க்குள் மகிழ்ந்து, கர்த்தருக்குள் மரித்த நமக்கு பிரியமானவர்களை கண்டு, நித்திய நித்தியமாய் களிப்போடு வாழும்படி நம் அனைவருக்கும் தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம்தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
..
உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன்..இயேசுவை
..
சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன் - அங்கு
சேர்ந்து பாடிடுவேன் - நான்
நடனமாடிடுவேன்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, இந்த உலகத்தில் பாடுகளை அனுபவிக்கிற எங்களுக்கு பரவசமான, சந்தோஷமான ஒரு நம்பிக்கையை கொடுத்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம். அனுதினமன்னா வாசகர்கள் ஒவ்வொருவரும் பரலோகத்திற்கு வரவேண்டுமே தகப்பனே, ஒருவராவது விட்டு போகாதபடி பரிசுத்தமாய் வாழும்படியாக கிருபை பாராட்டுவீராக. ஓவ்வொருவரின் பெயரும் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கத்தக்கதாக தங்கள் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணித்து வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Sunday, 5 June 2011

யாரும் போக விரும்பாத இடம்

உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப் போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். - (மாற்கு 9:43-44).

சில இடங்களுக்கு நாம் அடிக்கடி போக விரும்புவோம். எனக்கு ஆஸ்ரேலியா, மொரிஷியஸ் நாடுகளுக்கு போக வேண்டும் என்று விருப்பம் உண்டு. அதுப்போல உங்களுக்கும் சில இடங்களுக்கு போக விருப்பம் உண்டாயிருக்கும். ஆனால் சில இடங்களுக்கு நாம் போக விருப்பப்பட மாட்டோம். அதை குறித்து நமக்கு தெரியும்.

ஆனால் நாம் அனைவரும் போக விரும்பாத இடம் ஒன்று உண்டு. அதுதான் நரகம். சிலருக்கு என் வாழ்க்கையே நரகமாக இருக்கிறது என்று சொல்வார்கள். அவர்கள் உண்மையான நரகத்தை பற்றி அறியாததினாலே அப்படி சொல்கிறார்கள். நாம் நினைப்பதற்கும் அதிகமான இருளும், பயங்கரங்களும் சூழ்ந்திருக்கும் இடம் இந்த நரகமாகும். யாருக்கும் அங்கு போக விருப்பம் இல்லாவிட்டாலும் அநேகர் அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை சந்தித்திராத நேரம் வரை அவர்கள் அதற்கு நேராகத்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இயேசுகிறிஸ்து நரகத்தை குறித்து நமக்கு தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறபடியால் நரகம் என்பது மிகவும் உண்மையான இடமாகும். சில கிறிஸ்தவ பிரிவுகள் நரகம் என்பது பொய் என்று போதிக்கிறார்கள். ஆனால் நரகம் என்பது மிகவும் உண்மையான இடம் என்று வேதத்தின் வெளிச்சத்தில் காணப்போகிறோம். இயேசுகிறிஸ்து நரகத்தை குறித்து 11 தடவைகள் கூறியிருக்கிறார். அதிலிருந்து அது உண்மை என்பது விளங்குகிறதல்லவா?

நரகத்தில் யார் வாழ்கிறார்கள்? இயேசுகிறிஸ்து மிகவும் தெளிவாக கூறுகிறார், '...பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்' - (மத்தேயு 25:41) என்று. உபத்திரவ காலத்தின் முடிவில் சாத்தானும், அந்திகிறிஸ்துவும், கள்ளதீர்க்கதரிசியும் நரக அக்கினியில் தள்ளப்படுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்கள் மட்டுமல்ல, சில தூதர்களும் அங்கே இருக்கிறார்கள். 'தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்' (யூதா 6). அவர்கள் மட்டுமல்ல, இயேசுகிறிஸ்து ஒருகூட்ட மக்களையும் அங்கே அனுப்புகிறார். 'அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள (மத்தேயு 25:41). அவர்கள் கர்த்தர் விரும்பின காரியங்களை செய்யாதபடி இருந்தபடியால் அவர்கள் நித்திய ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டார்கள். 'அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3:18). கிறிஸ்துவை விசுவாசியாதவர்கள் யாவரும் அங்கே அனுப்பப்படுவார்கள்.

சரி, நரகம் என்பது எப்படி இருக்கும்?

நரகம் என்பது மிகவும் தாகமாய் இருக்கும் இடம். - (லூக்கா 16:24-26)
நரகம் என்பது அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படும் இடம். - (வெளிபடுத்தின விசேஷம் 14:10-11)
நரகம் என்பது அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடம். - (லூக்கா 13:28)
நரகம் என்பது தேவனுடைய சந்திதானத்திலிருந்து பிரிக்கிற இடம். - (2 தெசலோனிக்கேயர் 1:10)
நரகம் என்பது நினைவுப்படுத்தப்படும் இடம். நாம் செய்த தவறுகளும், பாவங்களும் நினைவுப்படுத்தப்பட்டு, நம்மை துன்புறுத்தும் இடம். - (லூக்கா 16:25)
நரகம் என்பது தேவனுடைய கோபம் கொட்டப்படும் இடம்.
நரகம் என்பது நித்திய நித்தியமான முடிவேயில்லாதது. - (மாற்கு 9:43-44)

இப்படிப்பட்ட இடத்திற்கு செல்ல யார் தான் விரும்புவார்கள்? நாம் இந்த இடத்திற்கு செல்லாதபடி நம்மை காத்து கொள்ள முடியும்! அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அல்லேலூயா! 'உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' - (யோவான் 3:16-18) ஆம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாக நரகத்திற்குள்ளாக தீர்க்கப்படான். ஆனால் அவரை விசுவாசியாதவர்களோ, ஏற்கனவே ஆக்கினை தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று என்று வசனம் நமக்கு போதிக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே நாம் நரக ஆக்கினையிலிருந்து தப்ப முடியும். கர்த்தரை இதுவரை விசுவாசியாதவர்கள் விசுவாசித்து நரக ஆக்கினைக்கு தப்பும்படியாக இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விசுவாசித்தவர்கள் இன்னும் பரிசுத்தத்தை பெற்று பரலோக வாழ்க்கைக்கு ஆயத்தமாகும்படி கர்த்தர் நமக்கு போதிக்கிறார். 'அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்'. - (வெளிப்படுத்தின விசேஷம் 22:11-12) என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மை பார்த்து கூறுகிறார். அநியாயத்திலும் அசுத்தத்திலும் வாழ்ந்து கர்த்தரின் வருகையில் வெட்கப்பட்டு நிற்போமா? அல்லது பரிசுத்தத்திலே முன்னேறி தேவனை சந்திக்க ஆயத்தப்படுவோமா? நம்மையே ஆராய்ந்து பார்ப்போமாக! கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! ஆமென் அல்லேலூயா!

எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
..
தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்
..
இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்தக் கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நரகத்திற்கு மனிதர்களாகிய நாங்கள் போவது உம்முடைய சித்தம் அல்ல என்று உம்முடைய சொந்த குமாரனையே உலக இரட்சிப்பிற்காக தந்த அன்பின் தேவனல்லவா? இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, நரகத்திற்கு நீங்கலாகி, பரலோகத்திற்கு பாத்திரவான்களாக மாறும்படியாக இதுவரை விசுவாசியாத ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். விசுவாசியாதவர்கள் எப்படியாவது இரட்சிப்பிற்குள் வரும்படியாக, நரக ஆக்கினைக்கு தப்பித்து கொள்ளும்படியாக அவர்களுக்கு உணர்த்துவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.