Search This Blog

Saturday, 19 July 2014

சிறுமியின் கோழிக்குஞ்சு...


ஒரு கிறிஸ்தவ சிறுமி கடையிலே போய் இரண்டு சிறு கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்து, அவற்றின்மேல் தன் முழு அன்பையும் கொடுத்து வளர்த்து வந்தாள். அவை அந்த சிறுமியோடு வெளியிலே உலாவச் செல்லும். அவள் அவற்றிற்கு கறையான், மற்றும் புழு பூச்சிகளையெல்லாம் தேடிக் கொடுத்தாள். தன் கைக்செலவுக்குரிய கொஞ்சக் காசையும் கொண்டு தானியத்தை வாங்கி அவைகளைப் உணவு கொடுத்தால். குஞ்சுகள் நாளுக்கு நாள் மேனியும், பொழுதொரு வண்ணமாய் கொழு கொழுவென்று அருமையாய் வளர்ந்தன்.

ஒருநாள் தற்செயலாய் அந்தக் கோழிக்குஞ்சுகள் எதிர்வீட்டுக்காரனின் வேலியின் அருகே மேயச் சென்றன. அவனோ கோபக்காரன். இரண்டு குஞ்சுகளின் தலையையும் பிடித்து கழுத்தை திருகி, வேலிக்கு அப்பால் எறிந்தான். அவை செத்து விழுந்தன. அந்த சிறுமியின் உள்ளம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அவளோ கிறிஸ்துவுக்குள் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.

அந்த இரண்டு குஞ்சுகளையும் தன் தாயினிடத்தில் கொண்டு போய், அம்மா, இதை நன்றாக சமையல் செய்து கொடுங்கள் என்று கேட்டாள். சமைத்த இறைச்சி முழுவதையும் எதிர்வீட்டுக்காரனுக்குக் கொண்டு போய், ""மாமா, நீங்கள் பசியாய் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்களுக்கு போஜனங்கொடுக்கும்படி என் ஆண்டவர் என் உள்ளத்தில் உணர்த்தினார். இதை கொண்டுவந்திருக்கிறேன்'' என்று சொல்லி கொடுத்தாள். அந்த வார்த்தையும், அவளுடைய செய்கையும் பக்கத்து வீட்டுக்காரனுடைய உள்ளத்தில் சம்மட்டியைக் கொண்டு அடிப்பதைப் போல இருந்தது. அவன் தலைகுனிந்தது மாத்திரமல்ல, தேம்பித் தேம்பி அழுதான். ஆம், அந்தச் சிறுமியின் செய்கை அவனை மனந்திரும்புதலுக்குள்ளே கொண்டு வந்தது.

இயேசு சொன்னார்: ""நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்''(மத். 5:44).

இயேசு தொடர்ந்து சொன்னார்: ""உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைப்பண்ணாதே'' (லூக்கா 6:29).

No comments:

Post a Comment