இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள். - (2கொரிந்தியர் 6:2).
ஒருமுறை சில வாலிபர்களுக்கு டி.எல். மூடி பிரசங்கியார் வேதபாட வகுப்பு நடத்தினார். அதில் ஒருவனைத்தவிர மற்றவர்களனைவரும் இயேசுவை ஏற்று கொண்டனர். அந்த வாலிபனிடம் ஒருநாள் மனந்திரும்புதலை குறித்து மிக உருக்கமாக பேசினார். அவனோ, 'நான் வெளியூருக்கு சென்று பணம் சம்பாதித்து திரும்பி வந்தபின் இயேசுவை ஏற்றுக்கொள்வேன்' என்றான். மூடி துக்கப்பட்டார். சில வாரங்களுக்குப் பின் அவன் நோய்வாய்ப்பட்டவனாக மருத்துவமனையிலிருந்தான். மூடி அவனை சந்தித்து 'இனியும் தாமதியாதே, உன் இரட்சிப்பைக் குறித்து முடிவு செய்' என வேண்டினார். அவன் மறுத்து, 'நான் சாகமாட்டேன், முன்பு சொன்னபடி பணம் சேர்த்தபின் ஆண்டவரை ஏற்றுக் கொள்கிறேன்' என்றான். பின்பு ஒரு நாள் குதூகலத்துடன் அவர் வீட்டிற்கு வந்து, 'நான் பயணமாக செல்லும் முன்பு உங்களிடம் விடைபெற்று கொள்ள விரும்புகிறேன்' என்றான். மீண்டும் மூடி அவன் தோளின் மேல் தம் கையை வைத்து பரிவுடன் ஆத்ம இரட்சிப்பைக் குறித்து பேசினார். அவன் மீண்டும் மறுத்து விட்டான்.
நடு ராத்திரி அவர் வீட்டுக்கதவை யாரோ பலமாக தட்டினார்கள். வெளியே ஒரு பெண்மணி,'என் கணவர் சாகுந்தருவாயிலிருக்கிறார், உடனே வாருங்கள்' என்று அழைத்தாள்; அந்த வாலிபனின்; மனைவி என அறிந்து அவர், 'இனி நான் அவனுடன் பேசி பயனில்லை. தனக்கருளப்பட்ட தருணங்களையெல்லாம் தள்ளிவிட்டானே' என்றார்;. எனினும் அவளுடைய கெஞ்சலுக்காக அவனைப் பார்க்க சென்றார். அவனோ மதியிழந்தவனாக மேலே பார்த்து கொண்டு 'பிந்தி விட்டதே, பிந்தி விட்டதே என்று புலம்பி கொண்டேயிருந்தான். அவனுடன் அவர் ஒன்றும் பேச முடியவில்லை; 'பிந்தி விட்டதே' என்று அவன் கதறிக்கொண்டே உயிரை இழந்தான். அந்தோ பரிதாபம்! தேவனின் தயவை அவன் புறக்கணித்து விட்டானே!
'கிறிஸ்துவை ஏற்று கொள்ள எனக்கு ஆசைதான். ஆனாலும் உலக இன்பங்களை முதலில் அனுபவிக்க ஆசைப்படுகிறேன்' என்று ஒருவன் தன் கிறிஸ்தவ நண்பனிடம் சொன்னான். 'உன் மனம்போல் செய்' என்று அவன் பதிலுரைத்தபோது, 'அப்படியானால் நான் எப்போது இரட்சிக்கப்பட வேண்டுமென்று' மீண்டும் கேட்டான். அதற்கு நண்பன், 'நீ சாவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு' என்றான். 'ஐயோ, நான் சாகும் நேரத்தை அறியேனே!' என்று அவன் அங்கலாய்த்தபோது, 'அப்படியானால் இப்போதே நீ கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று நண்பன் வற்புறுத்தினான்.
நண்பனே, நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்டாதே; ஒரு நாள் பிறப்பதை அறியாயே. - (நீதிமொழிகள் 27:1) இறுதியாக கிடைக்கும் வாய்ப்பை ஒருவேளை நீங்கள் இழந்து விடலாம். அப்படி நேரிடுமானால் உங்கள் நிலைமை என்ன? நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஆண்டவரின் கிருபையை அலட்சியம் பண்ணாதபடி இன்றே அவரை ஏற்றுக்கொள்வீர்களாக. தேவன் திரும்ப வரும் வேளையை எவரும் அறியார். ஆகவே எப்போதும் ஆயத்தமாயிருப்போம். இன்றிரவு அவர் வந்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் நீங்கள் அவரை வரவேற்பீர்களா? அல்லது, மலைகளையும், பாறைகளையும் பார்த்து என்மேல் விழுந்து அவர் முகத்துக்கு என்னை மறைத்து விடுங்கள் என்று கூப்பிடுவீர்களா? சடுதியாக திருடனைப்போல அவர் வரப்போவதால் இதுவே உங்கள் கடைசி தருணமாயிருக்கலாம், பயன்படுத்தி கொள்ளுங்கள். இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள். ஆமென் அல்லேலூயா!
அற்ப வாழ்வை நித்ய வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமோ?
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்?
வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ?
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து எங்கள் வாழ்நாட்களை கிருபையாய் கூட்டி கொடுத்து வருகிற நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நீர் கொடுத்திருக்கிற இந்த கிருபையின் காலத்திலே இரட்சிக்கப்பட்டு விட இந்த செய்தியை படிக்கிற ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வீராக. உலகம் எங்களுக்கு நிரந்தரமல்ல, உம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்குள் வாழ்வதே நித்திய வாழ்வு என்பதையும், இன்றே இரட்சண்ய நாள் என்பதையும் உணர்ந்து, உம்மண்டை வந்து விட கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment