Search This Blog

Tuesday, 5 April 2011

திரித்துவ தேவன்

பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். - (1 யோவான் 5:7).


தேவனுடைய திரித்துவத்தை குறித்து, இன்று அநேகருக்கு சரியான விளக்கம் இல்லாதபடியால், கிறிஸ்தவர்களும் இந்த மகத்துவமான காரியத்தை புரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள். அநேகர் அதை குறித்து வாக்குவாதம் செய்கிறவர்களுமாயும் இருக்கிறார்கள். முதலாவது நாம் அறிந்து கொள்ள வேண்டியது, தேவனுடைய எந்த வார்த்தையும் வாக்குவாதத்திற்கோ, பிரச்சனைகளுக்கோ உரியது அல்ல. நாம் புரிந்து கொள்ளாத ஒன்றை குறித்து, வாக்குவாதம் செய்வதால் எந்த பயனுமில்லை. கிறிஸ்தவமே விசவாசத்தின் அடிப்படையில் இருப்பதால், வசனம் சொல்வதுப் போல், கண்டு விசுவாசிக்கிறவனைவிட காணாமல் விசுவாசிக்கிறவர்களாகிய நாம் பாக்கியவான்களாயிருக்கிறோம். ஆகையால் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும்.மட்டுமல்ல, மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். - (உபாகமம் 29:29).

பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் என்று 1 யோவான் 5:7 ல் பார்க்கிறோம். அது என்னவெனில் ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவத்தில் அல்லது நபரில் இருக்கிறார். மூன்று கடவுள்கள் அல்ல, ஒரே கடவுள் மூன்று ஆள்தன்மை உடையவராயிருக்கிறார். வேதம் திரும்புவும் திரும்பவும் ஒரே கடவுள் என்றே நமக்கு போதிக்கிறபடியால், நாம் ஒரே கடவுள்தான் இருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும்.

வேதத்தின் ஆரம்பத்திலேயே தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக (ஆதியாகமம் 1:26) என்று பன்மையிலே சொல்கிறார், அதாவது மனிதனை படைக்கும்போதே திரியேக தேவனாய் இருந்து அவர் மனிதனை படைத்தார். அவர் ஏலோஹிம் என்றே அழைக்கப்பட்டார்.

ஆகவே ஆதி முதலே திரித்துவத்தை குறித்து அநேக இடங்களில் கூறப்பட்டுள்ளது. பிதாவானவர், திருத்துவத்தில் முதலான ஆள்த்தத்துவம் உடையவராகவும் குமாரன் திரித்துவத்தில் இரண்டாவது ஆள்த்தத்துவம் உடையவராகவும் பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தில் மூன்றாவது ஆள்த்தத்துவம் உடையவராகவும் இருக்கிறார்கள்.

இவர்கள் மூவரும் கர்த்தரும் ஆண்டவருமாய் இருக்கிறார்கள் என்றால் ஏன் வேதத்தில் மூன்று கடவுள்கள் என்று எழுதப்படவில்லை? பின் ஏன் பிதாவானவர், ஓரே கடவுள்தான் உண்டு, என்று வேதத்தில் எழுதியிருக்கிறார்?

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் மூவரும், தனித்தனி ஆள்த்தத்துவம் உடையவர்களும், மூவரும் தனித்தனியான முழுமையான ஆள்தத்துவம் உடையவர்கள் என்பதும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வித்தியாசமான அடையாளம் உடையவர்களாயிருக்கிறார்கள் என்பதும் சத்தியம். அது சற்று புரிந்து கொள்வதற்கு கடினமாயிருந்தாலும், நாம், மூவரும் ஒருவராயிருக்கிறார்கள் என்பதை விசுவாசிக்கவே வேண்டும்.

உதாரணத்திற்கு நாம் தினமும் பார்க்கிற காரியத்தை வைத்தே ஆராய்வோம். நாம் தினமும் பயன்படுத்துகிற தண்ணீர், 32 டிகிரி பாரன்ஹீட்டிற்கு கீழே போகும்போது, அது உறைந்து பனிகட்டியாக மாறுகிறது. அதே தண்ணீர் 212 டிகிரி பாரன்ஹீட்டில் கொதிக்கும்போது, ஆவியாக மாறுகிறது. அதே தண்ணீர் 32 டிகிரிக்கும் 212 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் இடையில் தண்ணீராகவே இருக்கிறது, அது எந்த நிலையிலிருந்தாலும் அது தண்ணீர்தான். அது வேறு திரவமாக மாற போது இல்லை. ஓவ்வொரு நிலையிலும் அதன் உபயோகம் வித்தியாசமாக இருந்தாலும், வித்தியாசமான பெயர்கள் இருந்தாலும் அடிப்படையில் தண்ணீராகத்தான் இருக்கிறது.

அதே போலத்தான் தேவனுடைய திரித்துவமும் காணப்படுகிறது. அவர்கள் மூன்று தனிப்பட்ட குணாதிசயங்களோடும் வேறுதரப்படட கிருபை வரங்களோடும் இருந்தாலும் அவர்கள் ஆண்டவரும் தேவனாகவும் ஒருவராகவும் இருக்கின்றார்கள்.

சூரியனிலும் மூன்று விதமான கதிர்கள் இருக்கின்றன. ஓன்று ஒளிக்கதிர் (Light Rays) அதை காணலாம் ஆனால் தொடமுடியாது. இரண்டாவது உஷ்ணக்கதிர் (Heat Rays), அதை உணரலாம், ஆனால் காணமுடியாது. மற்றது (Chemical Rays) இரசாயன கதிர் அதை பார்க்கவும் முடியாது, தொடவும் முடியாது. அதைப் போலத்தான் தேவனின் திரித்துவமும் இருக்கிறார். அவர் உண்டாக்கிய எல்லாமே மூன்றின் பெருக்கத்தொகையாகவே உள்ளது. கோழி முட்டையிடுவதிலிருந்து, அது குஞ்சு பொரிக்கும் காலம் வரைக்கும் 7 X 3 = 21 நாளாகவே இருக்கிறது.

மனிதனை தேவன் தமது சாயலிலே படைத்தார். அவன் ஆவி ஆத்துமா சரீரம் என்று சொல்லப்படும் மூன்று பாகங்களாகவே படைக்கப்பட்டான். அதில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்றவையும் பாதிக்கவேப்படும்.

இப்படி ஏராளமான உதாரணங்களை காட்டி கொண்டே போகலாம். இதில், தேவ திரித்தவத்தில் முதலாவதானவர் நாம் ஒவ்வொரு நாளும் நோக்கி கூப்பிட்டு ஜெபிக்கிற பிதாவானவர். அவரே சர்வ உலகத்தையும் எல்லாவற்றையும் படைத்த சிருஷ்டி நாயகர். அவர் இந்த பூமியிலுள்ள் தகப்பனைப் போல நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டிய முறைகளை நமக்கு காண்பித்து நடக்க சொல்லி கொடுக்கிறார்.

தேவ திரித்துவத்தில் இரண்டாவதானவர் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவானவர். அவரே தேவனாயிருந்தும் மனித அவதாரமெடுத்து, இந்த உலகில் பாவமில்லாமல் வாழ்ந்து காட்டியவர். பிதாவின் சித்தத்தின்படி, நம்முடைய பாவங்களுக்காக கோர சிலுவையில் பாடுகள்பட்டு, அறையப்பட்டு, மரித்து அடக்கம்பண்ணப்பட்டார். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.

தேவ திரித்தவத்தில் மூன்றாவதானவர் பரிசத்த ஆவியானவர். நாம் நடக்க வேண்டிய பாதையை நமக்கு வெளிச்சமாய் காண்பித்து வழிநடத்துகிறவர். நாம் பரிசுத்த ஆவியானவால் நிரப்பப்டும்போது, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படியாக விசுவாசத்தாலும், சாட்சியின் வாழ்க்கையாலும் நிரப்பப்படுகிறோம். இயேசுகிறிஸ்து காண்பித்து கொடுத்த பாதையில் நாம் நடக்கும்படி பரிசுத்த ஆவியானவர் நமக்கு போதிக்கிறார்.

இவ்விதமாக திரித்தவ தேவனாய், பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராக ஒவ்வொருவரும் வித்தியாசமான குணாதிசயங்களோடு இருந்தாலும், வித்தியாசமான தேவ ஆள்தத்துவமாக இருந்தாலும், அவர்கள் தண்ணீர் எப்படி மூன்று நிலைகளில் இருந்தாலும் ஒரே தண்ணீராகவே இருப்பதை போல இவர்களும் ஒருவராகவே இருக்கின்றனர்.

வேதத்தின் வசனங்களின்படி, மூனறு வித வகுப்பினர் வேதத்தில் காணப்படுகின்றனர். முதலாவது வகுப்பு, பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர். இம்மூவரும் தேவனாகவும், கர்த்தராகவும், ஆண்டவராகவும் இருக்கின்றனர். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை என்று 1 யோவான் 1:5-ல் பார்க்கிறோம். மற்ற வார்த்தையில் சொல்ல போனால், அவரிடத்தில் பாவமோ, மாம்சமோ, இருளோ இல்லை. அவர் பரிசுத்த தேவனாய் இருக்கிறார். அவரிடத்தில் எவ்வளவேனும் இருளில்லாததால் பாவம் எதுவும் செய்யகூடாதவராய் முற்றிலும் பூரணமான பரிசுத்தராய் இருக்கிறார்.

இரண்டாவது வகுப்பு, தேவன் படைத்த தேவ தூதர்கள். சாத்தான், தன்னோடு கூட மூன்றில் ஒரு பங்கு தூதர்களை கூட்டிக்கொண்டு, தேவனுக்கு எதிர்த்து நின்று அதனால் பரலோகத்தில் இருந்து தள்ளப்பட்டது, தேவதூதர்களும் பாவம் செய்யலாம், அவர்களிடத்தில் இருள் இருக்கிறது என்பதை குறிக்கிறது. இதனால் அவர்கள் தேவ திரித்துவத்தைப் போல பரிசுத்தமுள்ளவர்கள் என்றோ, அவர்கள் தேவர்கள் என்றோ சொல்வதற்கு தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் எந்த விதத்திலும் அவர்களை தேவர்களாக வணங்குவது பாவமாகும்.

மூன்றாவது வகுப்பு, தேவன் படைத்த மனிதர்கள் ஆவர். அவர்களும், பாவம்செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள் என்று வேதம் திட்டவட்டமாய் நமக்கு போதிக்கிறது. ஆகையால் மனிதர்களும் தேவதூதர்களை போல குறைவுள்ளவர்களாக, தேவர்கள் என்று சொல்வதற்கு தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். இக்காலத்து புதிய போதகர்கள் தவறான உபதேசத்தின் மூலம் நாம் தேவர்கள் என்று சொன்னாலும், அது ஒருநாளும் சரியாகாது. ஏனெனில் உலகில் வ்நத எந்த மனிதனும் பாவம் செய்து தேவ மகிமையற்றவானான் (ரோமர் 3:23). அதனால் அவன் தேவன் என்று சொல்லப்படுவதற்கு அருகதையற்றவன்.

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் எவ்வளவேனும் இருளில்லாமல், முற்றிலும் பூரணபரிசுத்தராய் இருப்பதால் அவர்கள் தேவனும் ஆண்டவரும் நமது ஆராதனைக்கும் துதிகளுக்கும் பாத்திரமாய் இருக்கிறார்கள்.

இயேசுகிறிஸ்து அடிக்கடி நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று சொல்வதினால், அவரும் பிதாவும் ஒருவரோடொருவர் இசைவுற்றவர்களாக எல்லாவிதத்திலும், ஒருமனமாக, ஒற்றுமையாக ஒன்றாக இருப்பதால் அவர்கள்; ஒரே கடவுளாக இருக்கினறனர். ஆவியானவரும் அவர்களோடு இசைந்து, முற்றிலும் பிதா குமாரனோடு ஒற்றுமையாக இருப்பதால் அவரும் மூன்று திரியேகத்தில் சேர்ந்து மூன்று கடவுள்களாக அல்லாமல், ஒரே கடவுளாக போற்றப்படுகின்றனர். பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் வேதத்தின்படி தேவனும் ஆண்டவருமாய் இருக்கிறார்கள் என்பதை வசனத்தின் ஆதாரத்தோடு இப்போது காண்போம்.

பிதாவாகிய தேவன்:

பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். - (1 கொரிந்தியர் 8:6).

நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிரத் தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். - (ஏசாயா 44:6)

நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிரத் தேவன் இல்லை - (ஏசாயா 45: 5)

இன்னும் ஏராளமான வசனங்கள் இருந்தாலும், ஆணித்தரமாக இந்த வசனங்கள், பிதாவாகிய தேவனை தவிர வேறு தேவன் இல்லை என்பதை நமக்கு விளக்குகிறது. அவருக்கு இணையாக அவரோடு அமர்வதற்கு வேறு யாரும் இல்லை என்பதை இந்த வசனங்கள் நமக்கு விளக்குகிறது.

குமாரானகிய தேவன்:

ஏறக்குறைய 18 வசனங்கள் கிறிஸ்துவும் தேவனும் ஆண்டவருமாய் இருக்கிறார் என்று நமக்கு வேதத்தில் விள்க்கபட்டுள்ளது. அதில் ஒரு சில வசனங்களை மட்டும் பார்ப்போம்:

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. - (யோவான் 1:1) .

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப்போதிக்கிறது. - (தீத்து 2:13).

அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். - (1 யோவான் 5:20 பின்பாகம்)

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்.. (பிலிப்பியர் 2:6)

இந்த வசனங்களும் இயேசுகிறிஸ்துவை தேவனென்று ஆணித்தரமாக சொல்கிறபடியால், அவரும் திரித்துவத்தில் ஒரு தனிப்பட் ஆள்தத்துவம் உடையவராயிருக்கிறார். அவரும் தேவனாகவும் ஆண்டவராகவும் இருக்கிறார்.

பரிசுத்த ஆவியானவராகிய தேவன்:

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. - (2 கொரிந்தியர் 3:17).

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன். - (சங்கீதம் 139:7).

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம். - (எபிரேயர் 9:14).

அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். - (1 கொரிந்தியர் 2:11).

இந்த வார்த்தைகளும் பரிசுத்த ஆவியானவரை தேவனாக நமக்கு வெளிப்படுத்துகிறது. அவரும் திரித்துவத்தில் ஒரு நபராக தேவனாகவும் ஆண்டவருமாய் இருக்கிறார்.

இந்த ஒவ்வொரு வசனத்தையும் நாம் கோர்வையாக பார்த்தால் தேவனின் திரித்துவமாகிய பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நபர்களாக, ஆள்தத்துவமுடையவர்களாக இருந்தாலும் அவர்கள், தேவனாயும், ஆண்டவராகவும், கர்த்தராகவும் நமது துதிகளுக்கும் ஆராதனைக்கும் பாத்திரராக இருப்பதையும், மூவரும் ஒன்றாக இருப்பதையும் நன்கு உணர முடிகிறது.

இந்த திரித்துவத்தில் ஒரு ஆள்தத்துவத்தை மட்டும் எடுத்து கொண்டு நாம், அவர் மாத்திரம் தான் கடவுன் என்று வணங்கினால் வேதத்தின்படி நாம் குற்றவாளிகளாக காணப்படுவோம். ஒரு முக்கோணத்தில் ஒரு பக்கத்தை எடுத்தால் அது எப்படி முக்கோணமாக இருக்காதோ அதுப்போல திரித்துவத்தில் ஒரு ஆள்த்தத்துவத்தை மாத்திரம் எடுத்தால்; அது தவறாகும். சிலர் இயேசுகிறிஸ்து மட்டும்போதும் என்பார்கள், சிலர் பிதா மட்டும் போதும் என்பார்கள். சிலர் பரிசுத்த ஆவியானவரின் நிறைவு இருந்தால் போதும் என்பார்கள். அது வேதத்தின்படி தவறானதாகும். நாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராகிய திரித்துவ தேவனாகிய ஒரு தேவனையே வணங்க வேண்டும். ஆராதிக்க வேண்டும். மற்றபடி நாம் ஒரு ஆள்தத்துவத்தை மாத்திரம் வணங்கினால், அதனால் ஒரு பிரயோஜனமுமில்லை, வேதத்தின்படி குற்றவாளிகளாயிருப்போம். அப்படி செய்யாதபடி தேவன் தாமே நம்மை காப்பாராக. ஆமென் ... அல்லேலூயா!
ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, திரித்துவ தேவனாகிய உம்மை நாங்கள் அறிந்து கொள்ளும்படியாக தேவன் எங்களுக்கு பாராட்டுகிற கிருபைக்காக நன்றி செலுத்துகிறோம். உம்முடைய ஞானம் அனந்தமானது, அளவற்றது. அதை மனிதர்களாகிய நாங்கள் அறிந்து கொள்ள முடியாது தகப்பனே. இந்த சிறிய கட்டுரையின் வழியாக நாங்கள் கடலைப் போன்ற காரியத்தை புரிந்து கொள்ள தேவன் தாமே கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment