Search This Blog

Saturday, 21 May 2011

வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். - (மத்தேயு 6:33).

ஒரு கல்லூரியின் பேராசிரியர் வாழ்க்கை தத்துவ வகுப்பில் தன் மாணவர்களுக்கு முன் சில பொருட்களை வைத்து சொல்லி தர ஆரம்பித்தார். ஒரு பெரிய வாயகன்ற பாட்டிலை கொண்டு வந்து, அதில் கோல்ப் பந்துகளினால் நிரப்பினார். நிரப்பி விட்டு, தன் மாணவர்களிடம் 'இந்த பாட்டில் நிரம்பி விட்டதா' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'ஆம் நிரம்பி விட்டது' என்றார்கள். பின் அதில் உருண்டையான கற்களினால் நிரப்பி, அந்த பாட்டிலை மெதுவாக உலுக்கினார். அந்த கல் உருண்டைகள் பந்துகளுக்கு இடையில் அங்கங்கு போய் அமர்ந்தது. பின் மாணவர்களிடம் 'இப்போது பாட்டில் நிரம்பி இருக்கிறதா' என்று கேட்க, அவர்களும் 'ஆம் நிரம்பியிருக்கிறது' என்று சொன்னார்கள். பின்னர் அந்த பாட்டிலில் மணலை கொண்டு வந்து நிரப்பினார். அதற்கும் அந்த பாட்டிலில் இடம் இருந்தது. பின் மாணவர்களிடம் 'இப்போதும் நிரம்பி இருக்கிறது அல்லவா' என்று கேட்டார். அதற்கு மாணவர்கள், ஆம் என்று கூறினார்கள்.

பின் அந்த பேராசிரியர் மாணவர்களிடம், 'இந்த உதாரணத்தை வைத்து உங்களுக்கு வாழ்க்கையை குறித்து விளக்க விரும்புகிறேன். இந்த பாட்டில் உங்கள் வாழ்க்கை போன்றது. இந்த கோல்ப் பந்துகள் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள முக்கியமானவர்களை குறிக்கிறது. தேவன், உங்கள் குடும்பம், உங்கள் நண்பர்கள் போன்ற முக்கிய உறவுகளை குறிக்கிறது. வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், ஆனால் இவர்களை நீங்கள் இழக்காவிட்டால், உங்கள் வாழ்க்கையில் எல்லாம் இருப்பதை போலத்தான் இந்த உறவுகள் உங்களுக்கு இருக்கிறார்கள். பின் போடப்பட்ட உருண்டையான கற்கள், உங்கள் வேலை, உங்கள் வீடு, உங்கள் கார் போன்றவற்றை குறிக்கிறது. இவை இல்லாமலும் நீங்கள் வாழ்ந்து விடலாம். மணல் மற்ற எல்லாவற்றையும் குறிக்கிறது, அதாவது தேவையற்றவைகளை!

உங்கள் வாழ்க்கையில் முழுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டுமென்றால் அது நீங்கள் மேலே காணப்பட்ட மூன்று காரியங்களில் எதை முக்கியமானதாகவும் முதலிடமாகவும் தெரிந்து கொள்கிறீர்களோ அதை பொறுத்தது. மணலை முதலாவது நிரப்பி, அதற்கு இடம் கொடுத்தால், கோல்ப் பந்துக்கோ, கற்களுக்கோ இடமில்லாமற் போகும். உங்கள் நேரத்தையும், உங்கள் கவனத்தையும், உங்கள் பெலனையும் மணல் போன்ற தேவையற்ற காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்தீர்களானால், உங்களுக்கு கோல்ப் பந்து, கற்கள் போன்ற முக்கிய காரியங்களுக்கு இடமே இல்லாமல் போய் விடும். ஆகவே எதற்கு முக்கியத்துவமும் முதலிடமும் கொடுக்கிறீர்களோ அதுவே உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் நிர்ணயிக்கும்' என்று விளக்கினார்.

ஆம், நாம் யாருக்கு முதலிடம் தருகிறோம்? கர்த்தருக்கா? நம் குடும்பத்திற்க்கா? அல்லது தேவையில்லாத மற்ற காரியங்களுக்கும், ஆட்களுக்குமா? நாம் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்கும்போது, நம் வாழ்வில் எல்லா தேவைகளும் சந்திக்கப்படும். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் என்று வேத வசனம் சொல்கிறது. நம்மில் சிலர்; கர்த்தரை தேடாதபடி, அவருடைய ராஜ்ஜியத்திற்குரிய காரியங்களை தேடாதபடி, எப்படியாவது நம் வாழ்வில் ஆசீர்வாதம் வேண்டும், நம் வாழ்வு செழிக்க வேண்டும் என்று எத்தனையோ பிரயத்தனம் பண்ணுகிறோம். ஓவர் டைம் வேலை என்று இரவும் பகலும் ஓயாமல் உழைத்து ஓடாய் தேய்ந்து போகிறோம். சிலர் சற்றும் ஓய்வெடுக்காதபடி தொடர்ந்து எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று ஓடாய் உழைக்கிறார்கள். கடைசியில் வியாதி வந்து படுக்கையில் இருக்கும்போது, அவர்கள் சம்பாதித்த சம்பாத்தியம் மற்றவர்கள் தான் அனுபவிப்பார்களே தவிர அவர்களால் அனுபவிக்க முடியாமற் போய் விடுகிறது. ஆரோக்கியமே சிறந்த சொத்து என்கிற பழமொழி உண்டு. ஆரோக்கியம் இருந்தால் எல்லாமே உண்டு. ஆரோக்கியம் இல்லாவிட்டால், எல்லாவற்றையுமே இழந்ததை போலத்தான்.

கர்த்தருடைய ஆசீர்வாதம் இல்லாமல் நாம் பாடுபட்டு, சம்பாதிக்கிற எல்லாமே வீண்தான். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்ளூ அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் (நீதிமொழிகள் 10:22) என்று வேதம் கூறுகிறது. முதலாவது அவருடைய ராஜ்ஜியத்தையும், நீதியையும் தேடும்போது, நமக்கு வேண்டிய வேதனையில்லாத ஆசீர்வாதங்களை நமக்கு நிறைவாய் கொடுப்பார். மற்றபடி நாம் படும் பாடுகளும், பிரயத்தனங்களும் எல்லாமே வீணாக போய் விடும். ஆகவே கர்த்தரை தேடுவோம், அவருக்கே நம் வாழ்வில் முதலிடம் கொடுப்போம். மற்றவற்றை அவர் பார்த்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!

முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு
பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
..
நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
..
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்கள் வாழ்வின் முதன்மையை எங்கள் தேவனுக்கு நாங்கள் கொடுக்கவும், எங்கள் வாழ்வின் முக்கியத்துவத்தை உமக்கே அர்ப்பணிக்கவும் எங்களை படைக்கிறோம். நீரே எங்கள் வாழ்வில் முதன்மையும் முழுமையுமாய் இருப்பீராக. தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடி அதினால் உம்முடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்ள கிருபை செய்யும். தேவையில்லாத காரியங்களில் எங்களை ஆழ்த்தி, சமாதானத்தை இழந்து போகாதபடி, தேவரீருடைய வேதனையில்லாத ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment