Search This Blog

Sunday, 15 May 2011

ஏற்ற சமயம் சொன்ன வார்த்தை

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். - (நீதிமொழிகள் 25:11).


தூங்கி கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கனவில் எக்காளம் ஊதும் சத்தம் கேட்டது. இயேசுகிறிஸ்து நியாயாதிபதியாய் நின்று கொண்டிருந்தார். மக்கள் சாரை சாரையாய் வந்து கொண்டிருந்தனர். வழியில் தூதன் ஒருவர் நின்று கொண்டு சிலரை வலது பக்கம் போக சொல்கிறார். சிலரை இடது பக்கம் போக சொல்கிறார். மிக வேகமாக இச்செயல் நடந்து கொண்டிருக்கிறது. வரிசைப்படி ஒரு மனிதனை வலதுபக்கம் போக சொல்லிவிட்டு அடுத்தவரை இடப்பக்கம் போகும்படி கையை காட்டினார். அந்தமனிதர் தூதனிடம் முந்தின மனிதனை (வலது பக்கம் சென்றவரை) சற்று நிற்க சொல்லுங்கள் என்றார். தூதன் காரணத்தை கேட்க, அந்த புறமத நம்பிக்கையுள்ள மனிதர் சொன்னார், 'ஐயா அந்த கிறிஸ்தவ நண்பன் 30 ஆண்டுகளாக என்னோடு சேர்ந்து பணியாற்றினார். என்னுடைய உற்ற நண்பன். ஆனால் ஒரு நாள் கூட இயேசுகிறிஸ்துவை பற்றி கூறினதேயில்லை. கூறியிருந்தால் என் நிலைமை ;பபடி ஆகியிருக்காதே' என்று கண்ணீர் வடித்தார். திடுக்கிட்டு விழித்து கொண்டார் கிறிஸ்தவ நண்பர். அன்று முதல் ஒரு நாளில் ஒருவருக்காவது சுவிசேஷம் சொல்வேன் என்று தீர்மானம் எடுத்தார். ஏற்ற நேரத்தில் தேவனுடைய வார்த்தையை அறிவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தார்.

ஒரு முறை ஒரு வியாபாரி தன் வியாபாரம் நொடிந்து போனதால் தற்கொலை செய்து கொள்ள தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது, அவரது நண்பர் ஒருவர் அவரை கண்டு, 'ஏன் கண்ணீரோடு இருக்கிறாய்?' என விசாரித்தார். கலக்கத்தோடு தன் முடிவை தன் நண்பனிடம் கூறியபோது, அந்த நண்பர் சொன்னார், 'வேத கோயிலுக்கு போ, அங்கு நிம்மதி கிடைக்கும்' என்று. அதற்கிணங்கி, தேவாலயத்திற்கு சென்றார். உள்ளே உட்கார்ந்து கண்ணீர் விட்டு கொண்டிருந்த அவரை பார்த்த ஆலய பணியாளர் அவரை பாஸ்டரிடம் கூட்டி சென்றார். பாஸ்டரும் அவருக்கு சுவிசேஷம் சொல்லி, கண்ணீரோடு ஜெபித்து, புதிய ஏற்பாடு ஒன்றையும் கொடுத்தனுப்பினார். என்ன ஆச்சரியம்! தற்கொலை எண்ணம் அடியோடு மாறியது, பெரிய நிம்மதி பிறந்தது. அன்றிலிருந்து கர்த்தரை முன்பாக வைத்து, ஜெபித்து, வியாபாரத்தை தொடர்ந்ததால் சில மாதங்களிலேயே வியாபாரம் செழித்தது. கடன் அடைபட்டது. 'கர்ததருடைய கோயிலுக்கு போ, நிம்மதி கிடைக்கும்' என்று ஏற்ற வேளையிலே சொல்லப்பட்ட இந்த வார்த்தை அழிவிலிருந்து ஒரு ஜீவனை காப்பாற்றியது.

பிரியமானவர்களே, தாமதமாய் வந்த நீதி அநீதிக்கு சமம்' என்று சட்டம் சொல்கிறது. 15 ஆண்டுகளாய் வழக்கு விசாரிக்கபட்டு, 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரு மனிதனுக்கு நீதிமன்றம் இவர் குற்றவாளியல்ல என்று தீர்ப்பு வழங்குவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? 1984-ல் பாரத பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்டபோது, மருத்துவமனையில் போய் சேர்க்க மூன்று மணி நேரம் தாமதமானது. இதை பத்திரிக்கை ஒன்று, 'மரணத்தை வரவழைத்த தாமதம்' என்று எழுதியது. ஆம், தாமதம் அநேக மரணத்தை வருவித்துள்ளது. கிறிஸ்தவர்களாகிய நமது தாமதம், ஏற்ற நேரத்தில் சொல்லப்படாத சுவிசேஷம் அநேகரை ஆத்தும மரணம் அடைய செய்து நித்திய நரகத்திற்கு தள்ளி விடும். இன்று ஒரு தீர்க்கமான முடிவெடுங்கள். வீட்டுக்கருகில், வேலை ஸ்தலத்தில், பள்ளியில், கல்லூரியில் அருகிலிருப்பவர்க்கு சுவிசேஷம் சொல்லுங்கள். இதுவே உங்கள் வாழ்வில் நீங்க்ள செய்யும் சிறந்த செயலாக இருக்கும். அது அவர்களை நித்திய அக்கினியிலிருந்து காப்பாற்றக்கூடிய ஏற்ற வேளையிலே சொல்லப்பட்ட வார்த்தையாக இருக்கலாம், ஆமென் அல்லேலூயா!

ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்திராமல் சோம்பலாய்க்

காலங்கழித்தோர் அந்நாளில் துக்கிப்பார் நிர்ப்பந்தராய்!

வானாள் எல்லாம் வீணாளாகச் சென்று போயிற்றே! ஐயோ

மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ?

..

கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா!

உதவாமல் பலனற்று, வெட்கப்பட்டுப் போவேனோ?

ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா

வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா?

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, அழிவிற்கு நேராய் சென்று கொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு நாங்கள் ஏற்ற வேளையில் நல்ல வார்த்தைகளை, சுவிசேஷத்தை சொல்லி, அவர்களை அழிவிலிருந்து மீட்டெடுக்க எங்களுக்கு தைரியத்தை தருவீராக. வெறுங்கையாய் உம்மை சந்திக்காதபடி, எங்களால் இயன்றவரை சுவிசேஷத்தை உலகிற்கு சொல்ல எங்களை எடுத்து பயன்படுத்தும். சுவிசேஷத்தை சொல்ல ஞானத்தை தாரும், பெலனை தாரும், தைரியத்தை தாரும், உற்சாகத்தை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment